கவலையில் கரையாதிரு மனமே


கவலை இல்லாத மனிதன் இந்த உலகில் எங்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்அவரவர் வாழ்வியல் சூழலுக்கும் தராதரத்திற்கும் ஏற்ப சிக்கல்களும், கவலைகளும்  மனித வாழ்வில் அன்றாடம் இருப்பது இயல்பாகிவிட்ட நிலையில்,
வாழ்வில் எதிர்பாராமல் வருகின்ற சிக்கல்களும் அதை கையாளத்தெரியாமல் மனம் தவித்து கவலையுறுவதும் தான், நம்மில் பலரின் மிக முக்கியப் பிரச்னையாக இருக்கிறது

இதுபோன்ற எதிர்பாராத சிக்கல்கள் வரும் போது அது அடுத்தவருக்கானது என்றால்   இலகுவகா ஒரு தீர்வை நம்மால்  சொல்லிவிட முடிகிறது. அதுவே நமக்கான சிக்கல் என்று வரும் போது நாம் குழம்பி தவித்து வருகிறோம்.. குறிப்பாக நாம் ஒரு குடும்பதலைவராக இருக்கும் போது எல்லா பிரச்னைகளுக்கும் நாமே பொறுப்பேற்று தீர்வை தேட வேண்டி உள்ளது.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நம்மை நாமே தயார்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் எதை திட்டமிட்டு செய்தாலும் பல நேரங்களில் காலம்தான் நமக்கான எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. எனினும் நமது தீவிர முயற்சிகள் மூலம் எதிர்பாராத சிக்கல்களில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அவ்வாறு எதிர்பாராமல் வரும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் கவலைகளில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள சில யோசனைகள்
பொருளாதார சிக்கல்கள்
பணத்தேவை என்பதும் பற்றக்குறை என்பதும் எல்லோரும் எதிர்கொள்கின்ற ஒரு சிக்கல். மிகச்சிலரே இதுபோன்ற கவலைகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருப்பினும் எதிர்பாராத செலவுகள் என்பது இயல்பான ஒன்று. சாமானியனோ செல்வந்தரோ பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட திட்டமிடுதல் அவசியமாகிறது.
மாதச்சம்பளம் பெருகிறவர்கள் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட ஒரு இலகுவான யோசனை என்னவென்றால் திடீர் செலவுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு சிறிய தொகையை எடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது உங்கள் கடமை என்பதை உணர வேண்டும்.

உடல்நலப் பிரச்னைகள்

இயல்பாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்க்கையில் நமக்கு எதிர்பாராமல் வரும் மற்றொரு பிரச்னை உடலக் குறைவு. எந்த நேரத்தில் என்ன செலவு என்று கணிக்க முடியாத சூழலில் நமக்கோ நம் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கோ திடீர் என உடல்நலத்தில் குறை எ எற்பட்டு மருத்துவ செலவும் அதிகரிக்க கூடும் அந்த நேரத்தில் கையில் பணம் இல்லை என்றால் மனம் படும் பாடு வார்த்தைகளில் சொல்ல முடியாது.
இதை சமாளிக்க முதலிலில் நீங்கள் மருத்துவரின் ஆலோசனைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பலநேரங்களில் வாழ்க்கையில் நாம் மற்ற விசயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது உடல்நலனுக்கு கொடுப்பதில்லை. பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் வராமல் முறைப்படி உடல்நலத்தை பேணுவதன் மூலம் ஆரோக்கியம் சீராக இருப்பதோடு நம் வங்கி இருப்பும் கரையாமல் இருக்கும்.

பொருத்தமற்ற கவலைகள்

இந்த நூற்றாண்டில் பல்வேறு வன்முறை சம்பங்கள் ஆங்காகே நிகழ காண்கிறோம். சின்ன வாக்குவாதம் கூட வன்முறைக்கு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற வன்முறையில் சில குடும்பங்கள் கூட சிதைந்து விடுவதுண்டு. எனவே எந்த ஒரு விசயத்தையும் கவனமாகவும் நிதானமாகவும் கையாளத் தெரிந்து வைத்திருப்பதோடு, அடுத்த தலைமுறையினருக்கும் நாம் கற்றுக் கொண்டுக்க வேண்டும். மேலும் நமக்கு நேரடி தொடர்பில்லாத சில பிரச்னைகளை மனதில் ஏற்றிக் கொண்டு கவலைப் படுவதை தவிர்க்க வேண்டும்.

குடும்ப பிரச்னைகள்

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் எல்லா வீடுகளிலும் நிச்சயமாக ஏதேனும் ஒரு பிரச்னை இருக்கவே செய்யும் நம் நெருங்கிய உறவினர்களுக்குள் இருக்கும் மனகசப்பு, மகன் அல்லது மகள் திருமண வாழ்வில் பிரச்னை, என எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு ரூபத்தில் குடும்பத்திற்குள் பிரச்னை தலையெடுக்க கூடும். அவற்றை நாம் எவ்வாறு கையாளவேண்டும் என்றால் பிரச்னையின் தன்மை மற்றும் உரிய நபர்களின் குணாதிசயங்களை மனதில் கொண்டு அணுகவேண்டும். அவை ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட விசயம் என்பதால் பொதுவான கண்ணோட்டத்தோடு அவற்றை நாம் பார்க்க கூடாது.

போக்குவரத்து சிக்கல்கள்

நம்மில் பெரும்பாலானோர் பயணத்திற்கு கார் அல்லது, பைக்குகளை நம்பிதான் இருக்கிறோம். ஒரு சிலர் மட்டுமே பேருந்து, மற்றும் சைக்கிள் எனப்படும் மிதிவண்டியை பயன்படுத்துகிறோம். இந்த நிலையில் நமது வாகனம் எதிர்பாராமல் எந்த நேரத்தில் நமக்கு தலைவலியை கொடுக்கும் என்று தெரியாது. ஏதேனும் முக்கியமான பயணத்தில் அல்லது அவசர பயணத்தில் இருக்கும் போது அது நம் காலைவாரிவிடுவது போல் நடுவழியில் நின்று சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். இதோபோன்ற சூழலில் இருந்து தப்பிக்க வாகனப் பராமரிப்பில் அலட்சியம் காட்டாமல் முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சமூக குழப்பம்

கருத்துவேறுபாடு என்பது நம் நண்பர்கள் அல்லது உறவினர்களிடையே எந்த நேரமும் ஏற்படக்கூடும். மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். அல்லது அவர்கள் ஏற்றுக் கொள்கிற ஒரு விசயத்தை நீங்கள் மறுக்கலாம்.

அவ்வாறான சமயத்தில் நீங்கள் உங்கள் கருத்தை வலியுறுத்திச் சொல்லும் போது பிறர் மனம் புண்படாதபடி பார்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். நாம் தனிமனிதன் என்றாலும். எப்போதும் பிறரை சார்ந்து இருக்க கூடிய ஒரு கூட்டு வாழ்க்கையில் இருக்கிறோம் என்பதை நினைவு கொண்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.

உங்கள் கருத்துக்களை மறவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது. தவறு. நீங்கள் பேசும் விதத்தை பொறுத்தே உங்கள் நண்பர்கள் உறவினர்கள், அல்லது அண்டை வீட்டாருடனான உறவு உங்களுக்கு நிலைத்திருக்கும். எல்லோரிடமும் சுமூகமான உறவை பேணுவதின் மூலம் தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். அதுவே சமூக குழப்பத்தை தீர்க்கும்.

வேலை இல்லை என்ற கவலை

நம் கவலைகளின் தன்மையை பொறுத்து கவலைப்படுவோர்களின் எண்ணிக்கை மாறுபடும். கவலைகளில் பெரும் கவலை வேலையில்லாத கவலை என்றுகூட சொல்லலாம். அவ்வாறு வேலை இழந்ததற்காக கவலைப்படுபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. முதலில் உங்கள் கவலையை தூக்கி தூர எறிந்துவிட்டு, மனதளவில் நீங்கள் உங்கள் செலவுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். பின்னர் உங்கள் கையிருப்பு மற்றும் செலவுகளை கணக்கிட்டு எவற்றை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். பின்னர் உங்கள் வருமானத்திற்கான வழிமுறைகளை கண்டுபிடியுங்கள்.
பின்னர் உங்கள் வேலை இழப்புக்கான காரணத்தை ஆராயுங்கள் என்ன செய்தோம். எப்படி நடந்து கொண்டோம் என்பதை உணர்ந்து முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் தன்னம்பிக்கையுடன் அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் தொடர்ந்து செல்லுங்கள். ஒரு தவறில் இருந்து நீங்கள் கற்று கொண்ட பாடம் உங்கள் இலக்கை அடைவதற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர காயமும் வலியும் குடும்பத்தினரை பாதிப்பதாக இருக்க கூடாது.

திருமண சிக்கல்கள்

வெளிநாடுகளில் திருமண பந்த முறிவு அதாவது விவாகரத்து என்பது சாதாரனமான ஒன்று. ஆனால் இங்கு விவாகரத்து என்பது அத்தனை எளிதானது அல்ல. திருமண வாழ்வில் சிக்கல் ஏற்பட்டால் அது உங்கள் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் குழந்தைகளின் மனதையும் பாதிக்கும். எனவே தம்பதியினர் மனதளவில் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்வது அவசியம்.

வாழ்கை என்பது ஒரு அழகான பூந்தோட்டம். எப்போதும் நாம் கலைநயதோடும், மகிழ்ச்சியோடும் வாழ தெரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரம் ஏதாவது ஒன்றுக்காக நாம் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பது என்பது தேவையற்றது. கவலைப்படுவதானால் நாம் எதையும் மாற்றிவிட முடியாது என்பதுதான் உண்மை. எனவே கவலையில் கரையாதிருமனமே.. எல்லா நாட்களும் நமக்கான தினமே.!
-    திருமலை சோமு

0 Comments: